கள்ளப்படகில் தனுஷ்கோடி வந்த இலங்கை வாலிபர்கள் மூவர் கைது

ராமேஸ்வரம்:போதைப்பொருள், மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க அங்கிருந்து இலங்கை வாலிபர்கள் 3 பேர் கள்ளப்படகில் தனுஷ்கோடி மணல் தீடைக்கு வந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவர் கபிலன் 34. இவர் போதை பொருள் விற்ற வழக்கிலும், கொழும்பு அருகே கொச்சிகடையை சேர்ந்த மதிவிளகே 33, சுமித்ரோலன் பெர்னான்டோ 43, (இருவருக்கும் தாய்மொழி சிங்களம்) இப்பகுதியில் மக்களிடம் பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறை சென்று ஜாமினில் வெளிவந்தனர்.

இவ்வழக்கில் சிறை தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் மூவரும் தமிழகத்திற்குள் ஊடுருவி தப்பிக்க திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு இலங்கை மன்னாரில் கள்ளப்படகில் தப்பிக்க கூலியாக இந்திய மதிப்பில் ரூ. 25 ஆயிரம் கொடுத்தனர்.

இவர்களை தனுஷ்கோடியில் இருந்து 5 கி.மீ.,ல் உள்ள 4ம் மணல் தீடையில் இறக்கி விட்டு படகோட்டிகள் பத்திரமாக இலங்கை திரும்பி சென்றனர். பின் இந்திய கடலோர காவல்படை வீரர்கள் மூவரையும் மீட்டு தனுஷ்கோடி கடற்கரையில் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளனரா என மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement