சசி தரூரால் பா.ஜ.,வில் புகைச்சல்?

3

புதுடில்லி: காங்கிரசிலும், பா.ஜ.,விலும் ஒருவரை பற்றித்தான் இப்போது அதிக பேச்சாக இருக்கிறது. அவர், முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், திருவனந்தபுரத்திலிருந்து நான்காவது முறையாக, காங்., - எம்.பி.,யான சசி தரூர்.

ஐக்கிய நாடுகள் சபையில், பல்வேறு பதவிகளில் பணியாற்றிய தரூர், தற்போது, பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டார்; மேலும், வெளியுறவுத் துறையின் பார்லிமென்ட் குழுவின் தலைவராகவும் உள்ளார்.

காங்கிரசின் எதிர்ப்பை மீறி, 'ஆப்பரேஷன் சிந்துார்' பற்றியும் பாகிஸ்தான் பயங்கரவாதம் பற்றியும் வெளிநாடுகளுக்கு விளக்க, பார்லிமென்ட் குழுவின் தலைவராக அமெரிக்கா சென்றவர் தரூர். அங்கிருந்து திரும்பிய பின், மோடியால் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டார்; வெளிநாட்டு மொழிகளை அறிந்த தரூர், ரஷ்யாவில் பிரெஞ்ச் மொழியில் பேசி, அனைவரையும் அசத்தினார்.சுருக்கமாக சொன்னால், ஒரு வெளியுறவுத் துறை அமைச்சர் செய்ய வேண்டிய விஷயங்களை செய்து வருகிறார் தரூர். இந்த விவகாரங்கள் ராகுலுக்கும், மல்லிகார்ஜுன கார்கேவிற்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. தரூரை, காங்., மறைமுகமாக விமர்சித்து வருகிறது. 'கட்சியிலிருந்து இவர் விரைவில் நீக்கப்படலாம்; இதையடுத்து, இவர் பா.ஜ.,வில் இணையலாம்' எனவும் காங்கிரசுக்குள் பேசப்படுகிறது.

இன்னொரு பக்கம், பா.ஜ.,விற்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 'வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, காங்கிரசின் தரூருக்கு இந்த அளவிற்கு எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?' என, புகைச்சல் நிலவுகிறதாம்.

'யாரிடம் திறமை உள்ளது என்பதை உன்னிப்பாக கவனிப்பது மோடியின் வழக்கம்; அதனால்தான், தரூருக்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறார்' என, பா.ஜ.,வில் ஒருசாரார் கூறுகின்றனர்.

Advertisement