15 வயதில் வீடு வாங்கினேன்: ஓவியர் ஷ்யாம் நெகிழ்ச்சி

ஓவியர் ஷ்யாம், 14 வயதிலே தமிழின் முன்னணி இதழ்களில் ஓவியம் வரைந்தவர். ரஜினியிடம் ஆட்டோகிராப் பெறுவதற்கென்றே சென்னை சென்ற ஷ்யாம், பல்வேறு இதழ்கள், புத்தகங்களில் பணியாற்றி தனக்கென தனி இடத்தை உருவாக்கி தற்போது தமிழகத்தின் முன்னணி ஓவியராக இருக்கிறார். அவருடன் உரையாடிய போது..

* ரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கி விட்டீர்களா?



ரஜினியை சந்தித்து இருந்தால் பார்த்த சந்தோஷத்தில் ஊருக்கு திரும்பியிருப்பேன். இப்போது இருக்கும் இடத்திற்கு உயர்ந்திருப்பேனா என தெரியவில்லை. சின்ன வயதில் நடிகர்கள் மேல் இருந்த பிரமிப்பு இப்போது இல்லை.

* சின்ன வயதில் படம் வரைய வீட்டில் எதிர்ப்பு இருந்ததா?



என் தாத்தாவை தவிர யாருக்கும் நான் படம் வரைவது பிடிக்காது. சின்ன வயதில் குருகுலம் சேர்ந்தபோதும், "படம் வரைந்தால் அடியுங்கள்" என்று சொன்னார் என் மாமா. யாரிடமும் சொல்லாமல் சென்னை வந்து, இத்துறைக்குள் நுழைந்து, மாத இதழ்களில் பணியாற்றி 15 வயதில் வீடு வாங்கி விட்டேன். மாமாவிற்குத் தான் முதலில் கடிதத்தில் தெரிவித்தேன். 5 நாட்கள் கழித்து பதில் வந்தது. அதில், "வீடு வாங்கும் அளவு எங்கு கொள்ளையடித்தாய்? இப்படிக்கு அன்பு மாமா..!" என எழுதப்பட்டு இருந்தது.

* ஒரு நாளைக்கு ஓவியத்திற்கு நீங்கள் செலவிடும் நேரம்?



ஒரு ஓவியம் கலரிங் உடன் முழுமையாக வரைய 15 நிமிடங்கள் தான். ஒரு நாளைக்கு 40- - 50 ஓவியங்கள் வரைந்து விடுவேன். சில ஓவியங்களுக்கு மணிக்கணக்கில் நேரம் தேவைப்படும்.

* உங்களுக்கு பிடித்த வண்ணம்?



நிச்சயம் கறுப்பு வெள்ளை தான். நிறைய ஓவியர்களுக்கு கறுப்பு வெள்ளையில் வரைவதே பிடிக்கும். ஒருவரை அவரின் நிழல்களைப் பார்த்து தான் வடிவம் வரைய முடியும். நிழல்களை கறுப்பு வெள்ளையில் அற்புதமாக வெளிப்படுத்த முடியும்.

* ஒரு கதை ஆசிரியருக்கும், ஓவியனுக்குமான உறவு எந்த மாதிரி இருக்கும்?



"வார்த்தைகளில் விவரிக்க இயலாத பந்தம்" என்பேன். அந்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். நிறைய கதையாசிரியர்களுடன் உரையாடி இருக்கிறேன். சுஜாதா, பாலகுமாரன் நன்றாக வரைக்கூடியவர்கள். பாலகுமாரனின் உடையார் 5 பாகங்களுக்கும் நான் தான் படம் வரைந்தேன். தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுப்பி "சின்னதாய் கிறுக்கிக் கொடுடா தம்பி" என்பார். அவ்வளவு பெரிய எழுத்தாளர் கேட்டவுடன் உடனே வரைந்து அவரிடம் நான் தர, ஓவியத்தின் ஈரம் காயும் முன்னே எடுத்து செல்வார்.

* இரு படைப்பாளிகள் ஓர் இடத்தில் இயங்கும் போது மோதல்கள் இயல்பு. உங்களுக்கு நடந்தது உண்டா?



இல்லை. கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட இதழ்களில் படம் வரைந்திருக்கிறேன். சினிமாவிலும் பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன்; யாருமே என்னை விட்டுக்கொடுத்தது இல்லை. நான் இத்துறையில் வந்தபோது, மா.செ., மாருதி,ஜெயராஜ் போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். மாருதி, "என்னுடைய பெண்களை விட உன் பெண்கள் ராஜகளையாக இருக்கிறார்கள்" என புகழ்வார். நாம் ஏதாவது குறை சொன்னால் கூட சரி செய்ய தயாராய் இருப்பார். அந்தளவு தலைக்கனம் இல்லாத மனிதர்.

* நீங்கள் வரைவது கலைக்காகவா? இல்லை பணத்திற்காகவா?



பணம் கிடைக்காத ஓவியங்களை நான் வரைவதில்லை. இதற்காக 24 மணிநேரமும் ஓவியம் பற்றி தான் என் சிந்தனை இருக்கும் என சொல்ல மாட்டேன். பணி நேரம் தவிர புது இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளுதல் பிடிக்கும்.

* நிஜ உலகில் வெளிப்படுத்த தயங்கும் விஷயங்களை ஓவியத்தில் வெளிப்படுத்துவதுண்டா?



நமக்குள் உள்ள அழுக்குகளை வெளிப்படுத்தும் இடமாக கலையை பார்க்கக் கூடாது. கதைக்கு ஏற்ப படம் வரைவது அவசியம் என கருதுகிறேன்.

* மறக்க முடியாத அனுபவம்?



நான் ஒரு சிற்றிதழில் 60ம் கல்யாணம் கொண்டாடும் தம்பதியினர் ஊஞ்சலாடுவது மாதிரி கற்பனையில் வரைந்து இருப்பேன். ஒரு ரயில் பயணத்தில் அந்த ஓவியத்தில் இருக்கும் தம்பதியினரை நிஜத்தில் நேரில் கண்டேன். அவர்களிடம் நான் வரைந்திருந்த படத்தை காட்ட, புடவையின் வண்ணம் கூட ஒத்துப்போய் இருந்ததை கண்டு திகைத்தனர்.
சில வாரங்களிலே அவர்கள் மகன் இருக்கும் ஜெர்மனிக்கு என்னையும் அழைத்துச் சென்று, என்னை கவனித்துக்கொண்டனர்.

* ஓவியத்தில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?



டிஜிட்டலில் வரைவதை விட்டு, பிரஷ்-ஐ கையில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement