ஆதரவற்றோரை அரவணைக்கும் ரட்சகன்

உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் ஒன்றாக பாவிக்க வேண்டும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன் 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என வள்ளலார் குறிப்பிட்டார். இவ் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில் ரோட்டோரங்களில் திரியும் ஆதரவற்றோர், மனநலம் பாதித்தவர்களை மீட்டு மறுவாழ்வு மையங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தல் போன்ற சமூகசேவையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளவர் ரஞ்சித்குமார்.

இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணிபுரிகிறார். இவர் இதுவரை ரோட்டோரங்களில் ஆதரவற்று திரிந்த 446 பேரை மீட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

இவரின் சமூக சேவையை பாராட்டி கவர்னர் ரவி, சிறந்த சமூக சேவைக்கான விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

ரஞ்சித்குமார் கூறியதாவது: எனக்கு சொந்த ஊர் கோவை மாவட்டம் வால்பாறை. பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ஆதரவற்றவர்களை மீட்டு சிகிச்சை அளிக்க விரும்பினேன். டி.பார்ம் படித்தேன்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய பள்ளி சிறார் நலத்திட்டத்தில் மருந்தாளுனர் பணிக்காக இங்கு வந்தேன். ஆதரவற்றவர்களை மீட்கும் பணியை துவங்கினேன்.

எனது பணி நேரம் முடிந்த பின் மீட்பு பணிகளில் ஈடுபடுகிறேன். துவக்கத்தில் இப்பணியை செய்யும் போது பலர் விமர்சித்தனர் அதை கண்டு கொள்வதில்லை.

ஒருவரை மீட்பதற்கு முன் அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிந்த பின் மீட்பேன். இவர்களை நான் சுத்தம் செய்து அரசு மருத்துவமனைகள், காப்பகங்களில் சேர்க்கிறேன். இச்சேவையால் பலரை அவர்கள் குடும்பத்துடனும் சேர்த்துள்ளேன்.

மனநலம் பாதித்தவர்களை போலீஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கிறேன். மருத்துவமனைகளில் ஆதரவற்றறோர் இறந்தால் அடக்கம் செய்ய போலீசார் என்னை அழைப்பார்கள்.

இதுபோன்று ஆதரவற்ற 18 பேருக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளேன். இறந்த சிலரின் உடல்களை தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு வழங்கி உள்ளேன். 10 ஆண்டுகளில் 46 முறை ரத்த தானம் செய்துள்ளேன். விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறேன்.

தாய் தந்தை இல்லாத பழங்குடியின குழந்தைகள் 60க்கும் மேற்பட்டோரை கண்டறிந்து, அரசுக்கு தகவல் தெரிவித்து காப்பகங்களில் சேர்த்துள்ளேன்.

ரோடுகளில் விலங்குகள் அடிபட்டு இறந்தால் அதையும் அடக்கம் செய்கிறேன்.

ரோட்டோரங்களில் முதியோர், மனநோயாளிகள் சுற்றி திரிந்தால் யாரிடம் தெரிவிப்பது என தெரியாமல் பலர் உள்ளனர். இவர்கள் பற்றி 14567 என்ற இலவச தொலைபேசிக்கு தெரிவிக்கலாம்.

உலகில் மரம், செடிகள், கால்நடைகள் ஆகியன வாயில்லா ஜீவன்கள். அவற்றிற்கும் உயிர் உண்டு. அடித்தால் நமக்கு வலிப்பது போல் அவற்றிற்கும் வலி இருக்கும். கவர்னர் விருது பெற்றது சந்தோஷமாக உள்ளது. இதுவரை மூன்று முறை கவர்னர் மாளிகையில் அவர் வழங்கிய தேனீர் விருந்தில் பங்கேற்றுள்ளேன்.

வீட்டில் குழந்தைகளுடன் செலவிடும் நேரமும் குறைவு தான். ஆனாலும் மனைவி தெய்வமலர், குழந்தைகள் நேகாஸ்ரீ, ஸ்ரீரக் ஷன் எனது செயலுக்கு ஊக்கமளிக்கின்றனர் என்றார்.

இவரை வாழ்த்த 94420 73579 எண்ணிற்கு ஹலோ சொல்லுங்க.

Advertisement