சாலை அமைக்கும் பணிக்கு தீர்வு 'தினமலர்' செய்தி எதிரொலி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்ட சாலை பணிக்கு 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக தீர்வு காணப்பட்டது.

நெல்லிக்குப்பம் நகராட்சி கீழ்பட்டாம்பாக்கத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற எஸ்.பி.கே.கார்டனில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலைகளை தார் சாலைகளாக புதுப்பிக்க நகராட்சி மூலம் 8 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்ததாரர் கடந்த 26ம் தேதி பொக்லைன் இயந்திரம் மூலம் பழைய சாலையை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.அப்போது, சாலை பணி நடக்கும் இடம் தனது வார்டுக்கு உட்பட்ட எல்லையில் வருவதாக கூறி 6வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ஸ்ரீதர், சாலை பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்.

20வது வார்டு தே.மு.தி.க., கவுன்சிலர் கவிதாவின் கணவர் கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை பணி நடக்கும் பகுதி எனது வார்டுக்கு உட்பட்ட எல்லையில் வருவதாக கூறியதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஒப்பந்ததாரர் சாலை பணியை பாதியிலேயே நிறுத்தினார்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டதில் ஆவணங்கள் அடிப்படையில் சாலை அமைக்கும் பணி 20வது வார்டு எல்லையில் வருவது தெரிந்தது. இதன் மூலமாக சாலைப் பணிக்கு தீர்வு ஏற்பட்டது.

இரண்டு நாட்களில் மீண்டும் சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது.

Advertisement