தசராவை புதிய முதல்வர் துவக்குவார் எதிர்க்கட்சி தலைவர் அசோக் 'குண்டு'

பெங்களூரு : ''மைசூரு தசராவை புதிய முதல்வர் துவக்கி வைப்பார்,'' என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் புது 'குண்டு' போட்டுள்ளார்.

நேற்று முன்தினம் டில்லியில் இருந்து பெங்களூரு திரும்பிய அவர் நேற்று அளித்த பேட்டி:

முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா, நவம்பர் மாதம் மாற்றப்படுவார் என, சட்டசபையில் நான் கூறினேன். அசோக் என்ன ஜோதிடரா என்று அமைச்சர்கள் கிண்டல் செய்தனர். எனக்கு கிடைத்த தகவலின்படி நவம்பருக்கு முன்பே முதல்வர் மாற்றம் நடக்கும். இந்த ஆண்டு மைசூரு தசராவை புதிய முதல்வர் துவக்கி வைப்பார்.

முதல்வர் நாற்காலிக்கு காங்கிரசில் கடும் சண்டை நடக்கிறது. இப்போது அந்த கட்சியில் நடப்பது 'டிரெய்லர்' தான். வரும் நாட்களில் முழு படம் வெளியாகும். பா.ஜ., தலைவர் விஜயேந்திராவை மாற்றுவது குறித்து, கட்சியில் எந்த விவாதமும் இல்லை.

பல மாநிலங்களின் பா.ஜ., தலைவரை அறிவிப்பது இன்னும் பாக்கி உள்ளது. அது முடிந்ததும் நமது மாநிலத்திற்கும் தலைவர் அறிவிக்கப்படுவார்.

அரசியலமைப்பு சட்டத்தின் மீது காங்கிரசுக்கு மரியாதை இல்லை. அப்படி இருந்தால் அவசரநிலையை அமல்படுத்தியதற்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement