கொல்கட்டா சட்ட கல்லுாரி மாணவி பலாத்காரம்: திரிணமுல் காங்.,கில் வெடித்த உட்கட்சி பூசல்

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், சட்டக்கல்லுாரி மாணவியை பலாத்காரம் செய்த விவகாரத்தில் திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே மோதல் வெடித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள கொல்கட்டாவில் தெற்கு கொல்கட்டா சட்டக்கல்லுாரி மாணவி ஒருவர் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்தவரான கல்லுாரியின் முன்னாள் மாணவர் மீது அந்த மாணவி புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், திரிணமுல் காங்கிரசின் எம்.பி.,யான கல்யாண் பானர்ஜி, மதன் மித்ரா எம்.எல்.ஏ., ஆகியோர் சில கருத்துகளை கூறினர். அது பெண்களுக்கு எதிரானது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

'இது அவர்களின் சொந்த கருத்துகள், கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை' என, திரிணமுல் காங்., தெரிவித்தது.

கட்சியின் இந்த பதிவை, 'டேக்' செய்த எம்.பி., மஹுவா மொய்த்ரா, 'இந்தியாவில் பெண் வெறுப்பு, கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. திரிணமுல் காங்கிரஸ் இக்கருத்திலிருந்து விலகுவது என்பதற்கு அர்த்தம், இதுபோன்று அருவருப்பான கருத்துகளை யார் சொன்னாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான்' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி தந்த கல்யாண் பானர்ஜி, 'மஹுவா தன் தேனிலவுக்குப் பின் இந்தியா திரும்பி வந்து என்னுடன் சண்டையிடத் துவங்கியுள்ளார். அவர் ஒருவரின் 40 ஆண்டு திருமணத்தை முறித்து, 65 வயது நபரை மணந்தார்.

அந்த பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா? 'நெறிமுறைகளை மீறியதற்காக பார்லி.,யில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி., எனக்கு உபதேசம் செய்கிறார். அவர்தான் மிகப்பெரிய பெண் விரோதி. தன் எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே அவருக்குத் தெரியும்' என, விமர்சித்துள்ளார்.

இதனால், சட்டக் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்கார விவகாரம், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement