கரன்ட் பில் பாதியாக குறைய சோலாரில் புதிய முயற்சி; முன்னாள் பேராசிரியர் கண்ணன் நிரூபிப்பு

மதுரை : 'சோலார் கருவியில் இருந்து மின்சாதனங்களுக்கு நேரடியாகமின்சாரத்தை கொடுப்பதன் மூலம் கரன்ட் பில்லை பாதியாககுறைக்க முடியும்' என முன்னாள் பேராசிரியர் கண்ணன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

மின்சாரம் இன்றைய அத்தியாவசிய தேவை. அது எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது, எவ்வளவு இழப்பாகிறதுஎன்பதை அறிய 'பவர் டிவிஷன்' என்ற புதிய தேற்றத்தை உருவாக்கியுள்ளேன். இந்த முறையில் ஜெனரேட்டர் மற்றும் மின்சாதனங்களுக்கு இடையில் மின்சாரம் எவ்வாறு பகிரப்படுகிறது, மின் இழப்பு எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.

இதற்கு முன் பயன்படுத்திய முறையில் மின்சார இழப்புகள் கணக்கில் கொள்ளப்படாது. பவர் டிவிஷன் முறையில் ஒரு கலத்தின் உள்ளே சென்ற, வெளியேறிய மின்சாரத்தை துல்லியமாக கணிக்க முடியும்.

இந்த தேற்றம் தற்போது அண்ணாமலை பல்கலை தன்னாட்சி கல்லுாரிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. அதுபோல், அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிகள் அனைத்திலும் கற்பிக்க வேண்டும்.

சோலார் மின்சாரம்



தற்போது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மின்சாரம் எடுக்கும் முயற்சியை உலக நாடுகள் பல வழிகளில் முயற்சித்து வருகின்றன. பூமிக்கு வற்றாத ஆற்றலாக இருப்பது சூரிய மின்சக்திதான். அதில் இருந்து சோலார் கருவியை பயன்படுத்தி மின்சாரம் எடுக்க முடியும். ஆனால் சோலார் பேனலில் இருந்து மின்சாரத்தை பேட்டரியில் சேமித்து பின்பயன்படுத்த கூடுதல் செலவாகும்.

அதற்கு மாற்றாக சூரிய ஒளியில் இருந்து நேரடியாக மின்சாதனங்களுக்கு கொடுப்பதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தற்போது வரும் அனைத்து மின் சாதனங்களும் 'ஸ்விச் மூட் பவர் சப்ளை' என்ற முறையில் இயங்குகின்றன. அதனால் டி.சி., மின்சாரத்தை நேரடியாக வழங்க முடியும்.

வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தும் மின்சாரத்துடன் இதையும் சேர்த்து பயன்படுத்தினால் 50 சதவீதம் மின்சாரம் சேமிக்கப்படும். இதனால் கரன்ட் பில் பாதியாக குறையும்.

குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் இடங்களில் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்தில் அதிக சேமிப்பு திறன் கொண்ட பேட்டரிகள் பயன்பாட்டுக்கு வந்தால், அதிக மின் தேவையுள்ள இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement