477 டிரோன், 60 ஏவுகணைகள்: உக்ரைனுக்கு அனுப்பியது ரஷ்யா

கீவ்: போர் துவங்கியதில் இருந்து மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷ்யா நேற்று தொடுத்துள்ளது என, உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.


கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை கடந்தும், இந்தப் போர் தொடர்கிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் அரசு, ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறது.



சமீபத்தில் ரஷ்ய எல்லைக்குள் சென்று உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.



இந்நிலையில், உக்ரைனின் கெர்சன், லிவிவ் மாகாணங்களை குறிவைத்து ரஷ்ய படையினர் 'ட்ரோன்' மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நேற்று தொடுத்தனர். உக்ரைன் எல்லைக்குள், 477 ட்ரோன்கள் மற்றும் 60 ஏவுகணைகள் என மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களை ஒரே நாளில் ரஷ்யா ஏவி, அந்நாட்டு படையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.



இதுகுறித்து உக்ரைன் விமானப்படையின் செய்தித்தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகையில், “ரஷ்ய படையினர் ஒரே நாளில், மிகப்பெரிய வான்வழி தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்துள்ளது. மேற்கு பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இத்தாக்குதலில், 475 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. எனவே, இத்தாக்குதலால், பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை,” என்றார்.



இதற்கிடையே, இத்தாக்குதலில் கெர்சன் மாகாணத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஆறு பேர் படுகாயமடைந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல் லிவிவ் மாகாணத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், அங்குள்ள தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, அங்கு ஒரு பகுதி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.



முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நேற்று முன்தினம் கூறுகையில், துருக்கியில், உக்ரைனுடன் மீண்டும் பேச்சு நடத்த ரஷ்யா தயாராக உள்ளது என்றார். எனினும், உக்ரைன் மீது முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷ்ய படையினர் அரங்கேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement