அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் உள்ள 7 அரசு கல்லுாரிகளில் 70 சதவீதம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடந்துள்ளது.
கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், வடலுார், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, பண்ருட்டி உள்ளிட்ட 7 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகிறது. கடலுார் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் 1,375 இடங்கள், சிதம்பரம் கல்லுாரியில் 1,130, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் 1,514, வடலுார் கல்லுாரியில் 230, காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில் 330, திட்டக்குடி கல்லுாரியில் 600, பன்ருட்டி கல்லுாரியில் 270 இடங்கள் என மாவட்டத்தில் மொத்தம் 5,449 மாணவர்கள் சேர்க்கைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இக்கல்லுாரிகளில் 10 முதல் 20 துறை சார்ந்த பட்டப்படிப்புகள் உள்ளன. அரசு கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் படி மூன்று கட்டமாக கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்தது.
அரசு கல்லுாரிகளில் கலைப் பிரிவுகளில் பி.காம்., பாடப்பிரிவிலும், அறிவியல் பிரிவுகளில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் சேர அதிக அளவில் மாணவர்கள் ஆர்வம் காட்டினர். அதனால் தான் அரசு கல்லுரிகளில் இரு பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது.
மற்ற பாடப்பிரிவுகள் அனைத்திலும் காலியிடங்கள் உள்ளது. மாவட்டத்தில் உள்ள 7 அரசு கலைக் கல்லுாரிகளிலும் சராசரியாக 70 சதவீதம் மாணவர்கள் தான் சேர்க்கை நடந்துள்ளது. அதாவது மொத்தம் 5,449 இடங்களில் 4,000 இடங்கள் மட்டுமே சேர்க்கை நடந்துள்ளது.
ஆனால் தனியார் கல்லுாரிகளில் அது கூட நடக்கவில்லை என தனியார் கல்லுாரி நிர்வாகங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அரசு கல்லுாரிகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 16ம் தேதி வகுப்புகள் துவங்கப்பட்டன.
மாணவர் சேர்க்கை முழுமை பெறாத நிலையில் இன்று (30ம் தேதி) முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய வகுப்புகள் துவங்குகிறது. முதலாமாண்டு மாணவர்களுக்கு முதல் வாரம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளில் கல்லுாரி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.
மேலும்
-
பெல்ஜியம் கார் பந்தயம்; அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடம் பிடித்து அசத்தல்
-
அதிகாலை பயணத்தால் விபரீதம்; டெம்போ மீது லாரி மோதியதில் பக்தர்கள் 3 பேர் பரிதாப பலி
-
'சட்டசபை தேர்தலை பா.ம.க., ஒரே அணியாக எதிர்கொள்ளும்'
-
இன்று அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர் ; குவாட் மாநாட்டில் பங்கேற்பு
-
திருப்பூரில் நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்; பீஹார் வாலிபர்கள் இருவர் கைது
-
'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'