அழிஞ்சிவாக்கம் - மேட்டுப்பாளையம் கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை

சோழவரம்:அழிஞ்சிவாக்கம் - மேட்டுபாளையம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்து இயக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்குன்றம் பகுதியில் இருந்து சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் - மேட்டுப்பாளையம் வழித்தடத்தில், மாநகர பேருந்து, 58எல் இயக்கப்படுகிறது.

செங்குன்றத்தில் புறப்பட்டு, மேற்கண்ட வழித்தடம் வழியாக மீஞ்சூர் சென்றடையும். மீண்டும் அதே வழித்தடத்தில் பயணிக்க வேண்டும்.

இந்நிலையில் பேருந்து சரிவர இயக்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் இந்த பேருந்தின் இயக்கம் இல்லாமல், பள்ளி மாணவ, மாணவியர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இந்த வழித்தடத்தில் இருளிப்பட்டு, அகரம், ஜெகன்னாதபுரம், குதிரைப்பள்ளம், கங்கையாடிகுப்பம் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் அத்யாவசிய தேவைகளுக்கு செங்குன்றம் மற்றும் மீஞ்சூர் பகுதிக்கு செல்ல பேருந்து வசதியை நம்பி உள்ளனர். மாநகர பேருந்து சேவை குறைபாடால், அவர்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:

இந்த மாநகர பேருந்து தினமும் இயக்கப்படுவதில்லை. விருப்பம் போல் இயக்கப்படுகிறது. செங்குன்றத்தில் இருந்து புறப்பட்டு, மீஞ்சூர் செல்லும். மீண்டும் அதே வழித்தடத்தில் திரும்பாமல், வேறு வழித்தடத்தில் சென்றுவிடும். காலை, மாலை நேரங்களில், சரியான நேரத்தில் இயக்கப்பட்டால், சோழவரம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேற்கண்ட பேருந்தை தினமும், முறையாக இயக்க வேண்டும். மேலும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement