குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் டிசம்பருக்குள் செயல்படும்: சேகர்பாபு

திருவள்ளூர்,:''குத்தம்பாக்கம் புதிய பஸ் நிலையம், இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்,'' என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில், 414 கோடி ரூபாயில், 25 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலைய கட்டடத்தின் இறுதி கட்ட பணிகளை ஹிந்து அறநிலைத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழும தலைவருமான சேகர் பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அவர் அளித்த பேட்டி:

தமிழக முதல்வர் உத்தரவுபடி இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது.

வரும் பயணியருக்கு ஏற்ப போக்குவரத்தை இயக்குவது, வரும் போக்குவரத்துக்கு உண்டான வாகனங்கள் நிறுத்துவது, பயணியருக்கான வாகனங்களை நிறுத்துமிடம்.

குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, பேருந்துகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு தேவையான ஓய்வறைகள், தேவையான உணவகங்கள், மருத்துவ வசதிகளுக்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு, பாதுகாப்பிற்கு தேவையான காவலர்களுக்கு உண்டான காவலர் கட்டமைப்பு போன்ற அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த பணிகள் முழுதும் விரைவாக முடிக்கபட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது வீட்டுவசதித்துறை செயலர் காக்கர்லா உஷா, உறுப்பினர் செயலர் பிரகாஷ், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement