கல்லுாரி அதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை

திருநெல்வேலி: ஆலங்குளம் அருகே பள்ளி, கல்லுாரி அதிபரின் வீட்டு பூட்டை உடைத்து, 100 சவரன் நகை, 20 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டணத்தில் திருநெல்வேலி - -தென்காசி நான்கு வழி சாலையில் பி.எட்., கல்லுாரி, ஸ்ரீ முப்பிடாதி அம்மன் மெட்ரிக் பள்ளி நடத்தி வருபவர் ராஜசேகர், 58. இவர், பள்ளி வளாகத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார்.

நேற்று, வெளியூரில் நடந்த உறவினர் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக ராஜசேகர் குடும்பத்தினருடன் சென்றார். கல்வி நிறுவன காவலாளிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, வளாகத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் விட காவலாளிகள் சென்றபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. உடனே ராஜசேகருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது புகாரில், ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர். பீரோவில் இருந்த, 100 சவரன் தங்க நகைகள், 20 லட்சம் ரூபாய் கொள்ளை போயிருந்தது. கல்லுாரியின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement