கல்லை போட்டு தம்பி கொலை அண்ணன் உட்பட 4 பேர் கைது

புதுக்கோட்டை: வடகாடு அருகே மோட்டார் மெக்கானிக்கை, சொந்த அண்ணனே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவத்தில், பெற்றோர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே புள்ளான்விடுதியைச் சேர்ந்தவர் விவசாயி, வீரப்பன், 65; இவரது மனைவி வசந்தா, 60; இவர்களுக்கு முருகேசன், 40, பாஸ்கரன், 35, என இரண்டு மகன்கள் உள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் முருகேசனுக்கு விமலாராணி, 32, என்ற மனைவியும், இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

பாஸ்கரன், வடகாடு பேப்பர் மில் ரோட்டில் மோட்டார் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். மனைவியை பிரிந்து, மகன் வசந்த், 5, என்பவருடன், அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம், பாஸ்கரன், வீட்டிலிருந்து சிறிது தொலைவில் சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து, வடகாடு போலீசார், விபத்து என வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், முருகேசன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர்கள் அனைவரையும் போலீசார் அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதில், முருகேசன் மனைவியுடன், பாஸ்கரன் தகாத உறவு வைத்திருந்ததால், அண்ணனே தம்பியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது.

பின், வடகாடு போலீசார், கொலை வழக்காக, பதிவு செய்து, முருகேசன், உடந்தையாக இருந்த அவரது தந்தை வீரப்பன், தாய் வசந்தா, முருகேசன் மனைவி விமலாராணி ஆகிய நான்கு பேரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement