அறியாமை குற்றங்களுக்கும் தண்டனை உண்டு நீதிபதி விக்டோரியா கவுரி பேச்சு

மதுரை : ''கிராமப்புறங்களில் போக்சோ குறித்த விழிப்புணர்வு இல்லாமையால் பல குற்றங்கள் வெளியே வருவதில்லை. அறியாமையில் குற்றம் செய்தாலும் தண்டனை உண்டு'' என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி தெரிவித்தார்.

மதுரையில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், துாய்மை விழிகள் அறக்கட்டளை இணைந்து வழக்கறிஞர் சாமிதுரை எழுதிய 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் போக்சோ சட்டமும்' நுால் , 'பிரெய்லி' வடிவில் வெளியிடப்பட்டது. நீதிபதி விக்டோரியா கவுரி முதல் நுாலை வெளியிட, முதல் பிரதியை டாக்டர் ராமசுப்பிரமணியன் பெற்றார்.

லேடி டோக் கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஆகியோருக்கு விருது வழங்கினர்.

விழாவில் நீதிபதி விக்டோரியா கவுரி பேசியதாவது: பெண் சமத்துவம் பற்றி அதிகமானோர் பேசினாலும், சிலர் தான் அதை செயல்படுத்துவர். சமீப காலமாக போதை பழக்கத்தால் ஆண்களும் பெண்களும் பாதித்துள்ளனர். கிராமங்களில் போக்சோ குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பல குற்றங்கள் வெளியே வருவதில்லை.

சட்டம் தெரியவில்லை என்று அறியாமையில் குற்றம் செய்தாலும் தண்டனை உண்டு. போக்சோவில் குறைந்தபட்ச தண்டனையே 20 ஆண்டுகள் எனும் போது குற்றம் செய்ய யோசிப்பர். போக்சோ குறித்த புத்தகம் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் இடம் பெற வேண்டும்' என்றார்.

மனநல டாக்டர் ராமசுப்பிரமணியன் பேசுகையில், ''குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் சமுதாயத்தின் பார்வைக்கு வருவதில்லை. இதில் பாதித்தோருக்கு வாழ்வின் கடைசி நாள் வரை அதன்தாக்கம் உள்ளத்தில் இருக்கும். சமுதாயத்தின் மீது நம்பிக்கை இன்றி எந்நேரமும் பயத்துடன் இருப்பர்'' என்றார். நுாலாசிரியர் சாமிதுரை ஏற்புரை வழங்கினார்.

இந்திய வழக்கறிஞர் சங்க மதுரைக் கிளைத் தலைவர் கலையரசி பாரதி, துணை பொதுச் செயலாளர் பாரதி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் குமரன், வைகை பொறியியல் கல்லுாரி முதல்வர் சிவரஞ்சனி பங்கேற்றனர்.

Advertisement