தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த வாலிபர்

ராசிபுரம்: தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த வாலிபரால், ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராஜ், 35; கூலி தொழிலாளி. வாய் பேச முடியாதவர்.

ஆர்.புதுப்பாளையம் அங்காளம்மன் கோவில் அருகே காலி மது பாட்டில்களை, நேற்று காலை பொறுக்கிக் கொண்டிருந்தபோது, பாம்பு, அவரை கடித்தது.

அந்த பாம்பை கொன்று, அதை ஒரு பையில் வைத்து, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார்.

சிகிச்சைக்கு ஓ.பி., சீட்டு வாங்கும்போது, வாய் பேச முடியாத சுப்புராஜ், சைகையில் பாம்பு தன்னை கடித்து விட்டதாக கூறியுள்ளார். ஊழியர்கள் திருதிருவென விழிக்கவே, பையில் இருந்த பாம்பை எடுத்து நீட்டி காட்டினார். அதைப்பார்த்து ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், ஓ.பி., சீட்டு கொடுத்து, டாக்டரிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement