அரசு கலை கல்லுாரியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு கோமுகி ஆற்றின் அருகே புதிய கட்டடத்தில் அரசு கலை கல்லுாரி தற்போது இயங்கி வருகிறது.

இந்த கல்லுாரியில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கச்சிராயபாளையம், தியாகதுருகம், கல்வராயன்மலை உட்பட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லுாரியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. அத்துடன் கல்லுாரிக்கு செல்லும் சாலையில் மின் விளக்கு வசதி மற்றும் வழிகாட்டி பலகைகள் இல்லை.

இதனால் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்த காணப்படும் ஆள் அரவமற்ற கிராம சாலையில் மாணவ, மாணவியர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில், கல்லுாரி வளாகத்தினை சமூக விரோதிகள் தங்களின் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பை மேம்படுத்திட வேண்டும். அதேபோல் கச்சிராயபாளையம் சாலையில் இருந்து கல்லுாரி வரையிலான சாலையில் தெரு மின் விளக்குகளையும், வழிகாட்டி பலகைகளையும் அமைத்திட வேண்டும்.

காலையில் கல்லுாரி துவங்கும் நேரத்திலும், மாலையில் வீட்டிற்கு செல்லும் நேரங்களிலும் மாணவர்களின் வசதிக்காக கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகளை ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement