கோயில்களில் திருமண மண்டப பணிகள் துவங்குவது... எப்போது ; அறிவிப்போடு நின்ற அறநிலையத்துறை திட்டங்கள்

ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருக்கோயில் நிர்வாகங்கள் கூடுதல் வருவாய் பெறவும், ஏழை எளிய மக்களின் திருமணங்களை குறைந்த செலவில் செய்து கொள்ள வசதியாக திருமண மண்டபங்கள் கட்டப்படும் என, கடந்தாண்டு அரசு அறிவித்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களில் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என, கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் இடங்களை திருக்கோயில் செயல் அலுவலர்கள் தேர்வு செய்து விபரங்களை ஆணையருக்கு தெரிவித்தனர். கம்பம் கம்பராயப் பெருமாள் காசி விஸ்வநாதர் கோயில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


10 ஏக்கரில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் ரூ.3.75 கோடியில் திருமண மண்டப கட்டுமானப் பணிகள் கடந்தாண்டு துவங்கியது. நகராட்சி அனுப்பிய நோட்டீஸ் காரணமாக நின்று போன கட்டுமான பணிகள், தற்போது துவங்கி உள்ளன. இதற்கிடையே இதே போன்று உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் வளாகத்தில் ரூ.4.75 கோடியிலும், சின்னமனுார் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் வளாகத்தில் ரூ.4.14 கோடியிலும் திருமண மண்டபங்கள் கட்டப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும், இதுவரை அதற்கான எந்த பணிகளும் துவங்கப்பட வில்லை. இந்த 2 கோயில்களிலும் திருமண மண்டபங்கள் கட்டும் திட்டங்கள், அறிவிப்போடு நின்று போனது. ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பழநி தண்டாயுதபாணி கோயில் நிதியில் இருந்து, நிதியை விடுவித்து, திருமண மண்டபங்கள் கட்டுமான பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆன்மிக அன்பர்கள், பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதனால் விரைவில் திருமண மண்டபங்கள் கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும் என, பக்தர்கள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement