ஐ.டி., ஊழியரிடம் ரூ.2.20 கோடி மோசடி நெல்லையில் பதுங்கிய கும்பல் சிக்கியது

சென்னை:சென்னை ஐ.டி., ஊழியரிடம் 2.26 கோடி ரூபாய் மோசடி செய்து, நெல்லையில் பதுங்கிய நான்கு பேர் கும்பலை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தி.நகரைச் சேர்ந்தவர் கிேஷார்; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்காக, அதுதொடர்பாக இணையதளத்தில் தகவல்களை சேகரித்துள்ளார். அதன் மூலம், 'வாட்ஸாப்' குழு ஒன்றிலும் சேர்ந்துள்ளார். இக்குழுவில் இருந்தோர், பங்குச்சந்தை முதலீடு செய்து, கோடிக்கணக்கில் சம்பாதித்தது போன்று பதிவுகளை வெளியிட்டு உள்ளனர்.

இதை உண்மை என நம்பிய கிேஷார், பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக வாட்ஸாப் குழுவில் இருந்த 'லிங்க்' மூலம் 2.20 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன்பின், அந்த வாட்ஸாப் குழுவில் இருந்து கி ேஷார் திடீரென நீக்கப்பட்டார்.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கிேஷார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது, மோசடி கும்பல் நெல்லை பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று, சத்தியநாராயணன், 60, மணிவேல், 25, ரோஷன், 35, சிம்சன் செல்லதுரை, 26, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 4.38 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.




முகவர்களை நியமித்து'பேஸ்புக்'கில் விளம்பரம்



மோசடி கும்பல் குறித்து போலீசார் கூறியதாவது:இந்த மோசடி கும்பல் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளது. பல மாவட்டங்களில் வாடகை கட்டடத்தில் முகவர்களை நியமித்து, பங்குச்சந்தை முதலீடு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளது.


மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள், வாடகை கட்டடத்தின் ஒப்பந்தத்தை பயன்படுத்தி, ஜி.எஸ்.டி., எண்களையும் பெற்றுள்ளனர். மேலும், போலி வங்கி கணக்குகள் துவங்கி, அதன் வாயிலாகவும் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.அதிகமான முதலீடுகளை ஈர்க்க, 'பேஸ்புக், யுடியூப்' உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பரமும் செய்துள்ளனர். பொது மக்களின் வங்கி கணக்குகளை பயன்படுத்திக்கொள்ள 'கமிஷன்' தொகையும் வழங்கி உள்ளனர். மோசடி தொகையை வெளி நாடுகளுக்கும் அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணை நடக்கிறது. கூட்டாளிகளையும் தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement