புதியவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் பா.ஜ., மாநில செயற்குழுவில் உத்தரவு

புதுச்சேரி : புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, பா.ஜ., மாநில செயற்குழுவில் அறிவுறுத்தப்பட்டது.

புதுச்சேரி பா.ஜ.,வில் அமைச்சர் சாய் சரவணன்குமார் தனது அமைச்சர் பதவியையும், அவரைத் தொடர்ந்து மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜான்குமார் எம்.எல்.ஏ., அமைச்சர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். நியமன எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த ராமலிங்கம், கட்சி தலைவர் பதவிக்கு நேற்று மனு தாக்கல் செய்துள்ளார். வேறு எவரும் மனு தாக்கல் இல்லாத நிலையில், அவர் இன்று மாநில தலைவராக அறிவிக்கப்பட உள்ளார்.

கட்சியில் கடந்த மூன்று நாட்களாக நடந்த அதிரடி மாற்றங்களை தொடர்ந்து நேற்று கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் செல்வகணபதி தலைமையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் சாய் சரவணன்குமார், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், கட்சியில் அதிரடியாக செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கான காரணம் குறித்து அமைச்சர் நமச்சிவாயம், மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா விளக்கினர். மேலும், புதிய தலைவர், அமைச்சர் மற்றும் நியமன எம்.எல்.ஏ.,க்களுக்கு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

Advertisement