12 மணி நேரம் அறிவிக்கப்படாத மின் 'வெட்டு' முத்தியால்பேட்டையில் மக்கள் கடும் அவதி

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் ஏற்பட்ட 12 மணி நேர அறிவிக்கப்படாத மின் தடையால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

முத்தியால்பேட்டையின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 8:00 மணிக்கு அறிவிக்கப்படாத மின் தடை ஏற்பட்டது. குறிப்பாக, ரோசாரியோ வீதி, புதுத் தெரு, காந்தி வீதி, ஒத்தவாடை வீதி, பிள்ளையார் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது.

வழக்கம்போல் சிறிது நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களுக்கும் மின் துறை கடும் ஷாக் கொடுத்தது. மாலை 6:00 மணி தாண்டியும் வரை மின்சாரம் வரவில்லை. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஒருவழியாக புதைவட மின் கம்பிகள் பற்றி எரிந்து மின் தடை ஏற்பட்டதை கண்டறிந்த மின் துறை ஊழியர்கள் இரவு 8:00 மணியளவில் மீண்டும் இணைப்பு கொடுத்தனர்.

அறிவிக்கப்படாத 12 மணி நேர தொடர் மின் தடையால் ஞாயிற்றுகிழமை அதுவுமாக வீடுகளில் குடும்பத்துடன் இருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். புதுச்சேரியில் முதன் முறையாக முத்தியால்பேட்டையில் கடந்த 1991ம் ஆண்டு புதைவட மின்கம்பிகள் புதைக்கப்பட்டு பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்டன.

ஆனால், தற்போது முத்தியால்பேட்டையில் அதிகரித்துள்ள மக்கள் தொகை, மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. அடிக்கடி புதைவட மின்கம்பிகள் தீப்பற்றி எரிவது வாடிக்கையாகி வருகிறது. இந்த புதைவட மின் கம்பிகளை முழுதுமாக மாற்ற புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement