ராசிபுரம் ராஜவாய்க்காலை துார்வார மக்கள் கோரிக்கை

ராசிபுரம்: ராசிபுரம்-சேலம் சாலையில், ராசிபுரம் ஏரி அமைந்துள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு, போதமலையின் ஒரு பகுதியிலிருந்து மழைநீர் வருகிறது. இந்த ஏரி நிரம்பி வெளியேறும் போது, ஏரியின் ஒரு பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் மூலமாக ராசிபுரம் நகராட்சிக்குள் சென்று அணைப்பாளையம் ஏரியை சென்றடைகிறது. ஏரியில், ரயில்வே மேம்பாலம், தனியார் ஆக்கிரமிப்பு என, மிகவும் சுருங்கிவிட்டது. ஏரி மட்டுமின்றி ஏரிக்கு வரும் வாய்க்கால், ஓடை ஆகியவை ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் வருவது மிகவும் குறைந்துவிட்டது. தொடர்ந்து கனமழை பெய்தால் மட்டுமே ஏரியில் குறைவாக தண்ணீர் தேங்குகிறது.


ஏரி நிரம்பி செல்லும் ராஜவாய்க்கால், தற்போது சாக்கடை நீர் செல்லும் கால்வாயாக மாறிவிட்டது. இந்த சாக்கடை நீர் செல்லும் வழியும், நாமக்கல் சாலையில் அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தால் மூடப்பட்டது. இதனால், சாக்கடை குட்டையாக மாறி, ராஜ வாய்க்கால் துர்நாற்றம் வீசுகிறது. ராஜ வாய்க்காலில் உள்ள சாக்கடையை துார்வாரினால், சாக்கடை நீரும் தேங்காமல் செல்லும். எனவே, ராஜவாயக்காலில் உள்ள சாக்கடை அடைப்பை துார்வார வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement