ஏலகிரிமலையில் 'ரோப் கார்' வசதி சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல்

ஜோலார்பேட்டை: ''சுற்றுலா பயணிகளை கவர, ஏலகிரியில் விரைவில், 'ரோப் கார்' விடப்படும்,'' என, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.


திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில், நேற்று நடந்த கோடை விழாவுக்கு கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை வகித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விழாவை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். விழாவில் பல்வேறு அரசு துறை சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பள்ளி மாணவ,- மாணவியரின் பரத நாட்டியம், சிலம்பம், ஒயிலாட்டம், மயிலாட்டம், ஏலகிரி மலைவாழ் மக்கள், பாரம்பரிய நடனமாடியும், தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் அமைச்சர் வேலு பேசுகையில்,''ஏலகிரி மலையில், 10 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளும், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14 கிராமங்களை இணைக்கும், 10 கி.மீ., சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன,'' என்றார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில்,''இங்குள்ள இயற்கை பூங்கா, படகு குழாம் சீர்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன், ஏலகிரி மலையில், 'ரோப் கார்' விடும் பணி விரைவில் தொடங்கப்படும்,'' என்றார்.
ஏலகிரி கோடை விழா, 2016க்கு பிறகு இந்த ஆண்டுதான் நடந்தது. ஆனால், இரு நாட்களுக்கு முன்தான் அறிவிப்பு வெளியானது. இதனால் நேற்று நடந்த கோடை விழாவுக்கு மக்கள், சுற்றுலாப்பயணிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் வெறிச்சோடியது.

Advertisement