மேட்டூர் அணை உபரி நீர் 57 ஏரிகளுக்கு திறப்பு

மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீரை, சேலம் மாவட்ட ஏரிகளுக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து, நேற்று துவக்கி வைத்தார்.


பின்பு அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது: திமுக ஆட்சியில், 2021, 2022, 2024, 2025 என நான்கு ஆண்டுகள் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. தற்போது அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரை சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் நிரப்ப தமிழக அரசு, 67௪ கோடி ரூபாய் செலவில் நீரேற்று திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.திப்பம்பட்டி நீரேற்று நிலையத்தில் இருந்து, 87 ஏரி, குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் திட்டம் மேற்கொள்ளப்பட்டு தற்போது, 57 ஏரிகளுக்கு நீர் கொண்டு செல்லும் வகையில் பணி முடிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ், 356 மில்லியன் கனஅடி நீர் நீரேற்று நிலையம் மூலம், 57 ஏரிகளில் நிரப்புவதால், 3,364 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி, சங்ககிரி வட்டங்களில், 11 நீர்வளத்துறை ஏரிகள்; நகராட்சியில் இரண்டு ஏரி, பேரூராட்சியில் மூன்று ஏரிகள், யூனியன்களில், 41 ஏரிகளும் நிரம்பும். இவ்வாறு கூறினார்.
அப்போது சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, எம்.பி., செல்வ கணபதி, பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement