மகன் வாங்கிய கடனுக்காக தந்தையின் விரல் துண்டிப்பு

கடலுார்::
மகன் வாங்கிய கடனுக்கு, தந்தையை கடத்தி, கை விரலை துண்டித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 71. இவரது மகன் மணிகண்டன்; மளிகை கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரிடம் வாங்கிய கடனை இவர் திருப்பி தரவில்லை. பழனிசாமி நெருக்கடி கொடுத்ததால், மணிகண்டன், அவரது தந்தை நடராஜன், சீர்காழியில் உறவினர் வீட்டில் தங்கினர். இதையறிந்த பழனிசாமி தரப்பினர் சீர்காழி சென்றனர்.

நேற்று காலை 6:00 மணிக்கு, சீர்காழி அடுத்த திருவிடந்தை கிராமத்தில், நடராஜனை வழிமறித்த ஐந்து பேர் காரில் அவரை கடத்தினர். சீர்காழி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேற்று காலை, கடலுார் குடிகாடு பஸ் நிறுத்தம் அருகே வந்த கும்பல், வாகன சோதனையில் இருந்த போலீசாரை பார்த்ததும், நடராஜனை இறக்கி விட்டு தப்பியது. போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த சக்திவேல், 65, உள்ளிட்ட ஐந்து பேர் என்பதும், நடராஜனை கடத்தியதும் தெரிய வந்தது. பிடிபட்ட அவர்களை, மயிலாடுதுறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட நடராஜனின் வலது கை விரல் பாதி துண்டிக்கப்பட்ட நிலையில் தொங்கியது; முகம் மற்றும் கை மணிக்கட்டில் பலத்த ரத்தக்காயங்கள் இருந்தன. கடலுார் அரசு மருத்துவமனையில் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

Advertisement