திருப்புவனம் அஜித்குமார் உடலில் 18 காயம் பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

மதுரை: சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, இறந்தார். அவரது தலை, கழுத்து, உடல் முழுவதும் காயங்கள் காணப்பட்டதாக பிரேத பரிசோதனையின் போது உடனிருந்த அஜித்குமார் சார்பில் ஆஜரான மதுரை மாவட்ட நீதிமன்றத்தைச் சேர்ந்த திருப்புவனம் வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் 2 தடய அறிவியல் துறை டாக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு அஜித்குமார் பிரேத பரிசோதனை நடந்தது. அவர் சார்பில் வழக்கறிஞர் கணேஷ்குமார் பிரேத பரிசோதனை வீடியோ போட்டோ எடுக்கும் போது உடனிருந்தார்.

அவர் கூறியதாவது: அஜித்குமார் உடலின் முன், பின் பக்கங்களை போட்டோ, வீடியோ எடுத்த போது உடல் முழுவதும் 18 காயங்கள் காணப்பட்டன. பழைய காயங்களை கணக்கில் எடுக்கவில்லை. புதிய காயங்கள் சிராய்ப்பாக, ரத்தம் கன்றி காணப்பட்டது. 2 காதுகளில் ரத்தம் வழிந்திருந்தது. இடது விலா எலும்பு ரத்தம் கன்றியிருந்தது. கை மணிக்கட்டு, மூட்டு, தோள்பட்டை, இடது முதுகு, இடது இடுப்பில் காயம் இருந்தது.

முகத்தில் 'ஷேவ்' செய்து பார்த்த பின்பே கழுத்தில் காயம் இருந்தது தெரியவந்தது. சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை காயங்களின் தன்மையை வைத்து புரிந்து கொள்ள முடிந்தது. உள்ளுறுப்புகளில் 40 இடங்களில் காயம் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அது டாக்டர்களின் அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்றார்.

'பிரேதபரிசோதனை முடிந்த 24 மணி நேரத்திற்குள் அதற்கான அறிக்கை ஒப்படைக்கப்படும். அதற்கு முன்பாக சொல்வது மரபில்லை' என தடய அறிவியல் துறை டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement