எல்லையோர மோதல் சம்பவம் பாகூர் ஸ்டேஷனில் சமாதான கூட்டம் 

பாகூர்: கரையாம்புத்துார் - களிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை சம்பவத்தை தொடர்ந்து, பாகூர் போலீஸ் நிலையத்தில் சமாதான கூட்டம் நடந்தது.

புதுச்சேரி பாகூர் அடுத்த கரையாம்புத்தூரில் கடந்த மே மாதம் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் நடந்த கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. அப்போது, தமிழக பகுதியான களிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும், கரையாம்புத்துாரை சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரையாம்புத்துாரை சேர்ந்த வாலிபர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இது குறித்து கரையாம்புத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க இரண்டு கிராமத்தினருக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைக்கு புதுச்சேரி - தமிழக போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, பாகூர் போலீஸ் நிலையத்தில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பாகூர் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், வளவனுார் இன்ஸ்பெக்டர் அருள்செல்வன், சப் -இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், சந்திரசேகர், வளவனுார் துணை தாசில்தார் திருமாவளவன், வி.ஏ.ஓ., வசந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், இதில் இரு கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள், போதை ஆசாமிகளால் தான் தினந்தோறும் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. பொது இடங்களில் மது குடிப்பதை இரண்டு மாநில போலீசாரும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர். போலீஸ் தரப்பில்'' மீண்டும் ஏதாவது சிறிய பிரச்னை என்றாலும், உடனடியாக போலீசாருக்கும் வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். பொது இடத்தில் மது குடிப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Advertisement