கருத்து சுதந்திரம் இல்லையா: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

16

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து, நாகரிகமின்றி பேசியவரை ஒருவரை கண்டிக்கக்கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:

நமது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அநாகரிகமாகப் பேசிய திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து தமிழக பா.ஜ., நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது.

தேசத்தின் தலைசிறந்த பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவரை, சிறிதும் மேடை நாகரிகமின்றி பேசிய ஒருவரை எதிர்த்து போராட அனுமதி மறுப்பது தான் தி.மு.க., மாடலா? பல பெண்களையும் ஏன் இந்து மதக் கடவுள்களையும் கொச்சையாக விமர்சித்து வரும் ஒருவரை கண்டிக்கக் கூட தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லையா? கண்டனப் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதைப் பார்த்தால், முதல்வர் ஸ்டாலின், ஆ.ராசாவின் கருத்தை ஆமோதிக்கிறாரா? அல்லது, முதல்வர் தான் இப்படி பேசச் சொல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.

சுதந்திர இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் போராடும் உரிமைகளைப் பறித்து தடை விதிப்பது மிகப்பெரும் கொடூரம்.ஆனால், எத்தகைய அராஜகத்தாலும், அடக்குமுறையாலும் நம்
தமிழக பா.ஜ., தொண்டர்களை ஒடுக்கி விட முடியாது. எனவே, திட்டமிட்டபடி சென்னையில் உள்ள ஏழு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 4 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் கைகள் கட்டப்படுவதை தமிழக மக்கள் பொறுமையாக பார்த்துக் கொண்டே இருக்க மாட்டார்கள். 2026-இல் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்! எனவே, தாமரை சொந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்! அரசியல் இயக்கங்களின் உரிமைகளை முடக்கப்பார்க்கும் பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement