சோலார் மின் திட்டம்; விசைத்தறியாளர் கோரிக்கை

பல்லடம்; திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
தமிழகத்தில், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில்தான் அதிகளவில் விசைத்தறிகள் உள்ளன. இவற்றில், 90 சதவீத தறிகள் கூலி அடிப்படையில்தான் இயங்கி வருகின்றன.
சமீப காலமாக, நலிவடைந்துள்ள விசைத்தறி தொழிலை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசால், ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் விசைத்தறிகளுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்திலும் விசைத்தறிகளுக்கு விலக்கு அளித்ததை வரவேற்கிறோம்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில், குடோன் ஒன்றுக்கு குறைந்தபட்சம், 10க்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. இவற்றுக்கு, மின் கட்டணம், மாதம், 3 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் வருகிறது. ஆயிரம் யூனிட்டுக்கான தொகையை கழித்தாலும், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.
எனவே, மின்சாரத்தை, விசைத்தறிக்கூடங்களிலேயே உற்பத்தி செய்வதற்கு, நெட் மீட்டர் வசதியுடன், 50 சதவீத மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை வகுத்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.