முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை வாகனங்களுக்கு 5 நாட்கள் தடை

திருத்தணி:முருகன் கோவிலில் ஆக., 14 - 18ம் தேதி வரை நடக்கும் ஆடிக்கிருத்திகை விழாவின் போது, அனைத்து வாகனங்களும், திருத்தணி நகருக்குள் நுழைய தடை விதிப்பதாக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

திருத்தணி முருகன் கோவிலில், ஆக., 14 முதல் 18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் காவடிகளுடன் வருவதால், முன்னேற்பாடுகள் குறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் கோவில் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கோவில் இணை ஆணையர் ரமணி வரவேற்றார். கூட்டத்தில், திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

வெளியூர் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையங்கள், மலைக்கோவில், சரவணபொய்கை திருக்குளம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.

குற்ற சம்பவங்களை தடுக்க மலைக்கோவில், தேவஸ்தான விடுதிகள் மற்றும் நகரத்தின் முக்கிய இடங்களில், 300க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்கள், 20 இடங்களில் உயர்கோபுரங்கள் அமைத்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.

ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழா நடக்கும் ஐந்து நாட்களுக்கு பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், திருத்தணி நகருக்குள் நுழைய தடைவிதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Advertisement