தி.மு.க., அரசின் சாதனைகள் கூறி பிரசாரம் முன்னாள் அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : மாவட்டத்தில் தி.மு.க., அரசின் சாதனைகள், மத்திய அரசின் வேதனை களை கூறி பிரசாரம் தொடங்கப்படுவதாக பொன்முடி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் எம்.எல். ஏ.,க்கள் பொன்முடி, மஸ்தான், லட்சுமணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி ஆகியோர், நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் பொன்முடி கூறியதாவது:

தமிழகம் முழுவதும் வீடு தேடி சென்று மக்களை சந்தித்து, மத்திய அரசு தமிழகத்துக்கு இழைக்கும் அநீதிகளை எடுத்து சொல்லி, மக்களை ஓரணியில் கொண்டுவரும் நோக்கத்தில், ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும். தொடர்ந்து 3ம் தேதி முதல் வீடுகள் தோறும் சென்று, தமிழகத்துக்கான ஆபத்துகள், குறிப்பாக மொழி, இனம், வரலாற்றுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளை மக்களிடம் எடுத்து கூறியும், தொடர்ந்து அரசின் நான்காண்டு சாதனைகளையும் விளக்க உள்ளனர்.

ஒவ்வொரு வீட்டுக்கும், 10 நிமிடங்கள் ஒதுக்கி அரசு சாதனைகளை கூறியும், அவர்களை தி.மு.க., உறுப்பினராகவும் இணைக்கும் பணியை கட்சியினர் மேற்கொள்வார்கள்

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மஸ்தான், லட்சுமணன், கவுதமசிகாமணி ஆகியோர் கூறுகையில், 'விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, 7 சட்டசபை தொகுதிகளிலும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்கி சிறப்பாக பிரசாரம் செய்யப்படும்.

மத்திய அரசின், தமிழக விரோத நடவடிக்கைகள் குறித்தும், தமிழக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியபடி, ஓட்டுச்சாவடிகள் தோறும் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோரை தி.மு.க., உறுப்பினராக்க கட்சியினர் பாடுபட வேண்டும். மீண்டும் 2026ல் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்கும் வகையில், தீவிரமாக களப்பணியாற்றுவோம்,' என்றனர். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் உடனிருந்தனர்.

Advertisement