மடப்புரம் சம்பவத்தில் நீதியை பெற துணை நிற்போம்: இ.பி.எஸ்.,

சென்னை: போலீசார் தாக்குதலில் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினரிடம் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., போனில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றிய அஜித்குமார் 29, மீது கோயிலுக்குவந்த சிவகாமி,நிகிதா இருவரும் 9.5 சவரன் நகையை காணவில்லை என்றும் அவர் சரியான பதில் தராததால் திருப்புவனம் போலீசில் நகை திருட்டு புகார் அளித்தனர். போலீசார் அஜித்குமாரை கோவில் அருகே வைத்து விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அஜித்குமாரை போலீசார் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து நேற்று முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் போனில் பேசி, ஆறுதல் தெரிவித்தார். அதை தொடர்ந்து அஜித்குமார் தம்பிக்கு அரசு வேலைக்கான உத்தரவு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

இ.பி.எஸ்., பதிவு:

மனித மிருகங்களால் கொல்லப்பட்ட மடப்புரம் அஜித்குமாரின் தாயாரிடமும், தம்பியிடமும் தொலைபேசி வாயிலாகப் பேசினேன்; என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.

தம்பி அஜித்குமார் கொலைக்கான நீதியைப் பெற்றுத் தர நிச்சயம் அதிமுக துணை நிற்கும்.

இவ்வாறு இ.பி.எஸ்., பதிவிட்டுள்ளார்.

Advertisement