தொலைபேசி உரையாடல் கசிவு தாய்லாந்து பிரதமர் இடைநீக்கம்

பாங்காக் : கம்போடியாவின் முன்னாள் பிரதமர் உடனான தொலைபேசி உரையாடல் விவகாரம் குறித்த விசாரணை துவங்கி உள்ளதால், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்னை நீடித்து வருகிறது.

எல்லையில் உள்ள எமரால்டு முக்கோணம் எனப்படும் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே மே 28ல் மோதல் ஏற்பட்டது. இதில், கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து, கம்போடியாவின் முன்னாள் பிரதமர், ஹுன் சென் உடன், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார். அப்போது, தாய்லாந்து ராணுவத் தளபதியை தன் எதிரி என ஷினவத்ரா குறிப்பிட்டார்.

இந்த தொலைபேசி உரையாடல் இணையத்தில் கசிந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி விலகவேண்டும் என்று அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மேலும், கம்போடியாவிற்கு அடிமையாகி ராணுவத்தை குறைத்து மதிப்பிட்டதாகக் கூறி அந்நாட்டு செனட்டர்கள் குழு குற்றஞ்சாட்டியது.

கம்போடியா உடனான எல்லைப் பிரச்னையின் போது பேடோங்டார்ன், அரசு நெறிமுறைகளை மீறிவிட்டதாக செனட்டர்கள் குழு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதைத்தொடர்ந்து, விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கும் வரை ஜூலை 1 முதல் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அரசியலமைப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

Advertisement