கட்டிக்குளத்தில் கருகும் நெற்பயிர் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு

மானாமதுரை : மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வைகையில் தண்ணீர் திறந்து விடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம், கொம்பு காரனேந்தல், முத்தனேந்தல், மிளகனூர், பீசர்பட்டினம், கால்பிரபு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோடை விவசாயம் செய்துள்ளனர்.

சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றதைத் தொடர்ந்து நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது.

கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கு வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு ராமநாதபுரம் சென்றடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற சிவகங்கை மாவட்ட பூர்வீக வைகை பாசன விவசாய பகுதிகளுக்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கட்டிக்குளம் விவசாயிகள் கூறியதாவது:

கட்டிக்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் கோடை விவசாயம் செய்த நிலையில் தற்போது நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாததாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததை தொடர்ந்து நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.

இதனைக் காப்பாற்றவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் வைகை ஆற்றில் சிவகங்கை மாவட்ட பகுதிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றனர்.

Advertisement