நகை வியாபாரிகளை அச்சுறுத்தும் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

தஞ்சாவூர் : திருட்டு நகைகள் வாங்குவதாக, நகைக்கடை வியாபாரிகளை, போலீசார் அச்சுறுத்தும் நிலையில், வியாபாரிகளுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி, நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தஞ்சை நகர நகை வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், தென் கீழ் அலங்கம் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் சரவணன். இவரை, திருட்டு நகைகளை வாங்கியுள்ளதாகக் கூறி, பெரம்லுார் போலீசார் ஜூன் 24ல் வேனில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவரிடம், 20 சவரன் நகையை கொடுத்தால், விட்டு விடுவதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த வணிகர் சங்க நிர்வாகிகள், போலீசாரிடம் பேச்சு நடத்த முயன்றனர்.

ஆனால், வணிகர் சங்க நிர்வாகிகளை, போலீசார் கீழே தள்ளி விட்டு, சரவணனை அழைத்துச் சென்றனர்.

இதை கண்டித்து வணிகர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, கும்பகோணம் பகுதிகளிலும் இரு நகை வியாபாரிகள் திருட்டு நகையை வாங்கியதாக போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று தமிழ்நாடு வணிகர் சங்க மாவட்ட தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில், நகை வியாபாரிகள் சம்மேளன மாநில தலைவர் சபரிநாதன், நகை ஏலதாரர் நலச்சங்க மாநில தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், திருட்டு நகையை வாங்குவதாக, நகை வியாபாரிகளை அவமதிக்கும் போலீசாரை கண்டித்தும், திருட்டு வழக்கில் போலீசாரின் செயலை வரைமுறைப்டுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement