நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் வாயிலாக பணம் மோசடி

1


ஊட்டி : நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ்-அப் வாயிலாக பணம் மோசடி செய்ய நடைபெற்ற முயற்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டராக லட்சுமி பவ்யா கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறார். அவரது புகைப்படத்தை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் போலி வாட்சப் கணக்கை உருவாக்கியுள்ளனர். அந்த எண்ணில் மாவட்ட கலெக்டரின் தொடர்பில் உள்ளவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் குறுஞ்செய்தியில் எனது வங்கிக் கணக்கில் பிரச்னை இருப்பதால் உடனடியாக பணம் அனுப்ப முடியவில்லை. நீங்கள் பணம் அனுப்பி உதவி செய்தால், என் வேலை முடிந்ததும் உங்களுக்கு மீண்டும் பணம் அனுப்புகிறேன் என்று கலெக்டர் கூறுவது போல் இருந்தது. சந்தேகம் அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் சிலர் இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கலெக்டர் லட்சுமி பவ்யா உடனடியாக மாவட்ட எஸ்.பி. நிஷாவை தொடர்பு கொண்டு போலி வாட்சப் கணக்கு குறித்து புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்தப் போலி வாட்ஸ் அப் கணக்கு வியட்நாமில் தொடங்கி இருப்பதாகவும் வெர்ச்சுவல் நம்பர் முறையில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பிரவீணா தேவி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் அனுப்ப வேண்டாம். என, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார்.

Advertisement