சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை; ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பு

ஊட்டி; கூடலுாரில்,17 வயது சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பளித்தது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் பகுதியை சேர்ந்த விதவை பெண் தனது, 17 வயது மகளுடன் வசித்து வந்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த ராமநாதன்,48, பணி நிமிர்தமாக கூடலுார் வந்துள்ளார். அப்போது உறவினர் மூலமாக பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவரின் தாய் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமி கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சிறுமியை அந்த நபருக்கு திருமணம் செய்து வைத்து, அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், சிறுமி மருத்துவமனை பரிசோதனைக்கு சென்றபோது, ஆவணங்களை சரிபார்த்த மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு திருமண வயது ஆகாததால், உடனே கூடலுார், குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கு தகவல் கொடுத்தது.

பின், கூடலுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார், ராமநாதனை, 2021ம் ஆண்டு, நவ., 19ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து, மகிளா கோர்ட் நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

Advertisement