கார் கவிழ்ந்து கோர விபத்து; கோவிலுக்கு சென்ற ஐவர் பலி

தொட்டபல்லாபூர்; அரசு பஸ் மீது மோதாமல் இருக்க திருப்பியபோது, கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த ஐந்து பேர் இறந்தனர்.

பெங்களூரு ரூரல் தொட்டபல்லாபூரில் இருந்து சிக்கபல்லாபூரின் கவுரிபிதனுார் சாலையில், நாயக்கரந்தனஹள்ளி கிராம பகுதியில் நேற்று காலை 9:00 மணிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. சாலையின் முன்னால் சென்ற லாரியை, கார் டிரைவர் முந்திச் சென்றார்.

அப்போது, எதிரே அரசு பஸ் வந்தது. பஸ் மீது மோதாமல் இருக்க, டிரைவர் காரை திருப்பினார். கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி, சாலையில் பல்டி அடித்து கவிழ்ந்தது.

விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி, பஸ் டிரைவர்கள், தொட்டபல்லாபூர் ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காருக்குள் இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காருக்குள் இருந்த ஐந்து பேர் இறந்தது தெரிந்தது. மூன்று பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள், தொட்டபல்லாபூர் அருகே கரேனஹள்ளி கிராமத்தின் ஈஸ்வரப்பா, 75, புருஷோத்தம், 62, காலப்பா, 69, கோபிநாத், 52, நரசிம்மமூர்த்தி, 50, என்பதும், இவர்கள் அனைவரும் உறவினர்கள் என்பதும் தெரிந்தது.

உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் என, 8 பேரும் சிக்கபல்லாபூர் பீமேஸ்வரா மலையில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றதும் தெரியவந்தது.

Advertisement