மாட்டு தொழுவத்திற்கு தினமும் ரூ.10 கட்டணம்

சென்னை,
'சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க அமைக்கப்படும் கால்நடை காப்பகத்தில் பராமரிப்பு கட்டணமாக, தினமும் 10 ரூபாய் வசூலிக்கப்படும்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தெருக்கள், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு கால்நடை காப்பகம் அமைக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சி மூலதன நிதியின் கீழ், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 19.44 கோடி ரூபாய் மதிப்பில், 13 கால்நடை காப்பகங்கள் அமைக்கப்படுகின்றன.

இதில், ராயபுரம் மண்டலத்தில் பேசின்பிரிட்ஜ் சாலையில், 1.30 கோடி ரூபாய் மதிப்பில் காப்பகம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதில், 240 கால்நடைகளை பராமரிக்க முடியும்.

கால்நடை டாக்டர் அறை, பராமரிப்பாளர் அறை, கட்டுப்பாட்டு அறை, மருந்துகள் வைப்பு அறை, 12 'சிசிடிவி' கேமராக்கள், மின் விசிறி வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்டவை உள்ளன.

மாடுகளை பராமரிக்க தினமும் 10 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement