அஜித்குமார் மரணம் எதிரொலி; தமிழகம் முழுவதும் போலீஸ் தனிப்படைகள் ஒட்டுமொத்தமாக கலைப்பு

28

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்டம், மாநகரங்களில் செயல்பட்டு வந்த போலீஸ் தனிப்படைகளை கலைத்து டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.


@1brதிருப்புவனத்தில், நகைகள் திருடுபோன புகாரின் பேரில் அஜித்குமார் என்ற வாலிபர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் அவர் உயிரிழந்த விவகாரம், தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. இதில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், போலீசாரையும், தமிழக அரசையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, சிவகங்கை போலீஸ் எஸ்.பி.,யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், மானாமதுரை டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்தும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை கைது செய்தும், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்கும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது, போலீஸ் தனிப்படை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகரிலும், தனிப்படை என்ற பெயரில் போலீசார், அந்தந்த உயர் அதிகாரிகளின் தலைமையில் செயல்படுவது வழக்கம்.
இந்த போலீசார் அனைவரும், வெவ்வேறு ஸ்டேஷன்களில் பணிப்பட்டியலில் இருந்தாலும், அவர்கள் உயர் அதிகாரிகளின் கூடவே இருந்து, அவர்கள் கூறும் செயல்களை மட்டுமே செய்வது வாடிக்கை. சட்ட விரோதமான செயல்பாடுகளுக்கு உதவியாக இருப்பதற்காகவே, தங்களுக்கு நெருக்கமான போலீசாரை, இந்த தனிப்படைகளில் உயர் அதிகாரிகள் வைத்துக்கொள்கின்றனர்.

இத்தகைய தனிப்படை போலீசார், நாளடைவில் தாங்களாகவே முன்னின்று சட்ட விரோத காரியங்களில் ஈடுபடுவதும் வழக்கம். எனினும், அவர்கள் உயர் அதிகாரிகளின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது.

இலை மறைவு காய் மறைவாக இருந்த இத்தகைய தனிப்படையினர் அத்துமீறல்,
சிவகங்கை அஜித் குமார் மரணத்துக்கு பிறகு, வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதை உணர்ந்த தமிழக டி.ஜி.பி., உடனடியாக தனிப்படைகளை கலைக்கும்படி அந்தந்த உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


குற்றச் செயல்கள் நடக்கும்போது, அதன் தன்மைக்கு ஏற்ப உரிய நோட்டீஸ் கொடுத்து தனிப்படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement