திருப்புவனத்தில் அரசு பள்ளிக்கு பூட்டு; மாணவர்கள் செல்ல முடியாமல் தவிப்பு

8


சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கல்வித்துறை அலுவலகம், அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை இன்று(ஜூலை 03) காலை 9:00 மணிக்கு சொக்கலிங்கம் என்பவர் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அரசு ஆண்கள் பள்ளி வைகை ஆற்றின் வடகரையில் செயல்பட்டு வருகிறது. 800 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். பள்ளி எதிரே ஐந்து ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. விளையாட்டு மைதானத்தின் உள்ளேயே வட்டார கல்வி மையம் செயல்பட்டு வருகிறது.

வட்டார கல்வி மையத்தில் 13 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள 43 பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள், பாடபுத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகிறது. இதன் அருகே மாற்று திறனாளிகள் அரசு பள்ளியும் செயல்பட்டு வருகிறது.



வழக்கமாக காலை 9 மணிக்கு வட்டார கல்வி மையம் திறக்கப்படும். இந்நிலையில் இன்று (ஜூலை 03) காலை அலுவலகம் வந்த போது வெளிப்புற கேட்டின் மேல் வேறு பூட்டு போடப்பட்டிருந்து. திருப்புவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் (56) என்பவர் வட்டார கல்வி மைய அலுவலகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் பூட்டியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.


போலீசார் விசாரணையில் சொக்கலிங்கத்தின் தந்தை அரசு பள்ளிக்கு விளையாட்டு மைதானம் அமைக்க ஒரு பகுதி நிலத்தை தானமாக வழங்கியதும், அதனை அதிகாரிகள் பதிவு செய்யாமல் வாய்மொழியாகவே 80 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. விளையாட்டு மைதானம் அருகில் சொக்கலிங்கத்திற்கு இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது.


அந்த நிலத்திற்கு செல்லும் பாதையை வேறு நபர் 15 வருடங்களாக ஆக்கிரமித்துள்ளார். சொக்கலிங்கம் இடத்திற்கு வருவாய்துறையினர் பட்டா உள்ளிட்டவை வழங்கவில்லை.

@quote@''அரசு பள்ளிக்கு நாங்கள் இடம் தந்துள்ளோம். என் பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை. எனவே தானமாக கொடுத்த இடத்தை பூட்டுகிறேன்'' என சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார். quoteஅவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Advertisement