கண்டதேவி கோயில் திருவிழா பாகுபாடு இல்லை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோயில் திருவிழாவில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க தடை கோரிய வழக்கில் பாகுபாடின்றி கடந்த ஆண்டுபோல் இம்முறை விழா நடத்தப்படும் என அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.


கண்டதேவி சிறுமருதுார் கேசவமணி தாக்கல் செய்த பொதுநல மனு: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.


இங்கு 2024 ல் திருவிழா, தேரோட்டம் நடந்தது. அனைத்து தரப்பினருக்கும் வடம் பிடித்து இழுக்க டோக்கன் வழங்கப்பட்டது. சிலர் முதல் மரியாதையை பெற்றுவிட்டு தேர் வடத்தினை பிடித்துக் கொண்டு மற்ற சமுதாயத்தினருக்கு வடம் பிடிக்கும் வாய்ப்பைத் தர மறுத்தனர். டோக்கன் பெற்ற நபர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டனர்.



ஜூலை 8 ல் திருவிழா நடைபெற உள்ளது. தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். யாருக்கும் முதல் மரியாதை அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


தேவகோட்டை அருகே கீழக்கடியாவயல் கடிகை ரவி,'கண்டதேவி கோயில் திருவிழாவில் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்,' என மனு தாக்கல் செய்தார்.


நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.


மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பிரபுராஜதுரை, முத்துச்சாமி ஆஜராகினர். தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா.கதிரவன், அரசு வழக்கறிஞர் சுப்புராஜ் ஆஜராகி கூறியதாவது: இது பல்வேறு கிராமங்கள் சம்பந்தப்பட்ட திருவிழா. 2024 ல் தேரோட்டத்தின்போது 435 டோக்கன் வழங்கப்பட்டது. அனைத்து சமூகத்தினரும் பங்கேற்றனர். பாகுபாடு இல்லை. பங்கேற்பதை யாரும் தடுக்கவில்லை. சுமூகமாக விழா நடந்தது. கடந்த ஆண்டு நடைமுறையை பின்பற்றி இம்முறை விழா நடத்தப்படும் என்றனர்.


இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்ட தரப்பினர் தங்களின் உரிமைகள் தொடர்பாக அறநிலையத்துறை சட்டப்படி உரிய இடத்தில் மனு செய்து நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement