மதுரை மாநகராட்சியில் முறைகேடு மேயரை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும் அ.தி.மு.க., வலியுறுத்தல்

மதுரை : ''மதுரை மாநகராட்சியில் நடந்த ஊழல் முறைகேடு தொடர்பாக மேயர் இந்திராணியை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: மதுரை மாநகராட்சி ஊழல் செய்வதில் முதலிடத்தில் உள்ளது. நடப்பாண்டில் மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1480 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்தனர்.

குறிப்பாக ரூ.370 கோடி சொத்து வரி என கணக்கு காட்டப்பட்டது. சொத்து வரி உயர்த்தப்பட்டதால் கூடுதலாக ரூ.250 கோடி அளவில் கிடைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் அந்த பட்ஜெட்டால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை.

மதுரை மாநகராட்சியில் 4 லட்சத்து 12 ஆயிரம் சொத்து வரி கட்டும் கட்டடங்கள் உள்ளன. இதில் 3 லட்சத்துக்கு மேல் வணிக கட்டடங்கள். கடந்த 2022 முதல் வணிக கட்டடங்களுக்கு, குடியிருப்பு கட்டடங்களின் வரியை நிர்ணயித்து மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

இந்த முறைகேட்டில் 8 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களுக்கு பின்னால் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் உள்ளனர்.

இந்த ஊழல் அடிப்படையில் மேயர் இந்திராணி, மண்டல தலைவர்களை 'டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்.

மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது குறித்து துறை அமைச்சரான நேரு, ஏன் மதுரை வந்து ஆய்வு கூட்டம் நடத்தவில்லை. ஏன் மவுனமாக உள்ளார்.

மதுரையில் உள்ள இரு அமைச்சர்களும் எந்த பதிலும் கூறவில்லை.

முதல்வர் ஸ்டாலினும் இவ்விவகாரம் குறித்து தெரிந்தும் தெரியாதது போல் உள்ளார்.

இவ்வாறு கூறினார்.

Advertisement