கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 சீட்டுக்காக மவுனம்; செல்லுார் ராஜூ கிண்டல்

7


மதுரை: சிவகங்கையில் போலீஸ் விசாரணையின் போதுஇளைஞர் உயிரிழந்த விவகாரத்திற்கு குரல் கொடுக்காமல் தேர்தலில் 2 சீட்டுக்காக கம்யூனிஸ்ட் கட்சிகள் மவுனமாக இருப்பதாக அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.

அ.ம.மு.க.,வில் இருந்து மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வரவேற்றார். செல்லுார் ராஜூ கூறியதாவது: அ.தி.மு.க.,வில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவது காலம் காலமாக நடக்கும் ஒன்று. வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்ய பிரிந்து சென்றவர்கள் தற்போது இணைந்துள்ளனர்.

தி.மு.க., ஓரணியில் தமிழகம்' என்று மக்களிடம் எந்த சாதனையை கூறுவர். அ.தி.மு.க.,வின் 10 ஆண்டுகால ஆட்சியில் மதுரைக்கு பல சாதனைகள் செய்துள்ளோம். பொதுமக்களுக்கு ரூ.1000 கொடுத்தால் போதுமா. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவில்லை. இதன் ரிசல்ட் பூஜ்ஜியம் தான். சட்டசபை தேர்தலை மனதில் வைத்து மகளிர் உரிமைத் தொகையில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.



மதுரை மாநகராட்சியில் இதுவரை இல்லாத வகையில் ஊழல் நடந்துள்ளது. துாய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கி, நிரந்தர துாய்மைப் பணியாளர்கள் 800 பேருக்கு மாநகராட்சி சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் ரூ.1 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்பட்டு தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சாத்தான்குளத்தில் நடந்த போலீஸ் விசாரணை மரணத்தை விட கொடுமையான சம்பவம் சிவகங்கையில் நடந்துள்ளது. தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மக்கள் நலன் முக்கியம் இல்லை. இந்நேரம் களத்தில் நின்று போராடியிருக்க வேண்டும்.


ஆனால் தேர்தலில் 2 சீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்த கூட்டணி மவுனத்திற்கு சரியான பதிலடியை மக்கள் தேர்தலில் வழங்குவர் என்றார்.

Advertisement