ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் கூலி தொழிலாளிகள்

திருவாலங்காடு,:ஆபத்தை உணராமல்பயணம் செய்யும் கூலி தொழிலாளிகளுக்கு காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் --- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், திருவள்ளூர், சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சென்று வருகின்றன.

திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை வழியாக செல்லும் இந்த நெடுஞ்சாலையில், கட்டுமான பொருட்கள், காய்கறி, பருப்பு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரி, செங்கல் ஏற்றி செல்லும் டிராக்டர் போன்ற வாகனங்களில் பொருட்களை ஏற்றி, இறக்க வரும் தொழிலாளிகள், அந்த வாகனங்களில் ஆபத்தான வகையில் பயணிக்கின்றனர்.

அவர்களில் பெரும்பாலானோர், ஆபத்தான நிலையில், வாகனத்தின் மேற்புறத்தில் அமர்ந்தும், சிலர் மூட்டைகள் மீது படுத்தும், அமர்ந்தபடி துாங்கியும் பயணிக்கின்றனர். இதனால், அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதுபோன்று அபாயகரமாக பயணம் செய்வோர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement