முதிய தம்பதியிடம் கத்தியைகாட்டி 211 சவரன் கொள்ளை

மூங்கில்துறைப்பட்டு; முதிய தம்பதியிடம் கத்தியை காட்டி மிரட்டி, 211 சவரன் நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனுாரை சேர்ந்தவர் கேசரி வர்மன், 44. இவர், தன் மனைவி, குழந்தைகளுடன் துபாயில் வசிக்கிறார். துபாய், ஷார்ஜா ஆகிய இரு இடங்களில் எலக்ட்ரிக்கல் கம்பெனி நடத்துகிறார்.

இவரது மகளுக்கு ஜூலை, 7ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்த குடும்பத்துடன், கடந்த வாரம் துபாயிலிருந்து, சொந்த ஊர் வந்திருந்தார்.

வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்த, 211 சவரன் நகையை வீட்டில் வைத்திருந்தார். நேற்று முன்தினம் கேசரிவர்மன், குடும்பத்துடன் சென்னை சென்றார்.

அப்போது திடீரென, அவரது தந்தையிடம் இருந்து போன் அழைப்பு வந்தது.

தந்தை கூறுகையில், 'நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், நான்கு பேர் கொண்ட முகமூடி கொள்ளை கும்பல், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, என்னையும், உன் அம்மா பொன்னம்மாளையும் கத்தியை காட்டி மிரட்டி, ஒரு அறையில் அடைத்தனர். அவர்கள் பீரோவில் இருந்த, 211 சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி, 6,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்' என, மகனிடம் தெரிவித்தார்.

உடனே ஊர் திரும்பிய கேசரிவர்மன், சங்கராபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். எஸ்.பி., ரஜக் சதுர்வேதி, டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசார் நேரில் விசாரித்தனர்.

அதே பகுதியில், ராமலிங்கம் என்பவர் வீட்டின் பின்பக்க கதவையும் உடைத்து, முகமூடி கொள்ளையர்கள் திருட முயன்றது தெரிந்தது. மர்ம கும்பலை பிடிக்க போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement