6 மாதத்தில் இரு மடங்காக உயர்ந்தது தேங்காய் எண்ணெய் விலை: மரச்செக்குகளில் உற்பத்தி நிறுத்தம்

பொள்ளாச்சி: கொப்பரை தட்டுப்பாடு காரணமாக, தேங்காய் எண்ணெய் விலை, ஆறு மாதங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
தேங்காய்க்கு தேவை அதிகம் இருப்பதன் காரணமாக, தமிழகத்தில் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து காணப்படுகிறது.தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு தேவைப்படும் கொப்பரைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கொப்பரை தேங்காய், எண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.
காங்கேயம் கொப்பரை மார்க்கெட்டில்
கடந்த ஆண்டு 2024 நவ., 9ம் தேதி,
கொப்பரை சாதா கிலோ -ரூ.128 ரூபாய்
கொப்பரை ஸ்பெஷல் கிலோ -ரூ.132 ரூபாய்
தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்)-ரூ. 2680
தேங்காய் (பச்சை) டன் -ரூ.44 ஆயிரம்
தேங்காய் ( கருப்பு) டன் -ரூ.48 ஆயிரம் இருந்தது.
இதுவே, ஜனவரி 02 ம் தேதி நிலவரப்படி,
கொப்பரை சாதா கிலோ -ரூ.147
கொப்பரை ஸ்பெஷல் கிலோ -ரூ. 150
தேங்காய் பவுடர் கிலோ -ரூ.260
தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) - ரூ.3,100
தேங்காய் (பச்சை) டன் - ரூ.58,000
தேங்காய் ( கருப்பு) டன் - ரூ.62,000 ஆக விற்பனை ஆனது.
ஆனால், அதே காங்கேயம் மார்க்கெட்டில் இன்று( ஜூலை 04) நிலவரப்படி,
கொப்பரை சாதா கிலோ -ரூ.244
கொப்பரை ஸ்பெஷல் கிலோ -ரூ. 249
தேங்காய் பவுடர் கிலோ -ரூ.320
தேங்காய் எண்ணெய் (15 கிலோ டின்) - ரூ.5,800
தேங்காய் (பச்சை) டன் - ரூ.73,000
தேங்காய் ( கருப்பு) டன் - ரூ.76,000
அதாவது, ஆறு மாத கால இடைவெளியில், தேங்காய் எண்ணெய் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இது செக்கு மூலம் எண்ணெய் ஆட்டும் சிறு உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகவில்லை.
அவர்களுக்கு 2 கிலோ கொப்பரை ஆட்டினால், 1 லிட்டர் தேங்காய் எண்ணெய் கிடைக்கும். ஆனால், அதற்கு ரூ.500 வரை உற்பத்தி செலவாகும். அதற்கு மேல் லாபம் வைத்து விற்றால் மட்டுமே கட்டுப்படியாகும். ஆனால் அவ்வளவு விலை கொடுத்து மக்கள் தேங்காய் எண்ணெய் வாங்க முன்வருவார்களா என்பது உற்பத்தியாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.
எனவே, விலை கட்டுப்படி ஆகாத காரணத்தினால், மரச்செக்கு மூலம் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் சிறு உற்பத்தியாளர்கள், உற்பத்தியை நிறுத்திவிட்டனர்.
பாக்கெட்கள், கேன்கள், பாட்டில்களில் அடைத்து தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பழைய இருப்பை கொண்டு, விற்பனை செய்வதால், அவர்கள் மட்டும் விற்பனையில் இருக்கின்றனர்.
கொப்பரை விலை உயர்வு காரணமாக, புதிதாக கொப்பரையை கொள்முதல் செய்து தேங்காய் எண்ணெய் உற்பத்தியை துவங்கும் போது, அவர்களும் விலையை உயர்த்த வேண்டிய நிலை உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வரும் வாரங்களில் தேங்காய் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.



மேலும்
-
'பெராரி' சொகுசு காருக்கு ரூ.1.42 கோடி அபராதம்
-
அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி
-
தி.மு.க.,வின் 'ஏ டீம்' த.வெ.க., அர்ஜுன் சம்பத் ஆவேசம்
-
கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி
-
செல்வப்பெருந்தகை நிகழ்ச்சியில் வெளியேறிய காங்., -- எம்.எல்.ஏ.,
-
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்