சாமந்தவாடாவிற்கு எப்போது கிடைக்கும் நிரந்தர தரைப்பாலம்?

பள்ளிப்பட்டு:பருவமழையின் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் நிரந்தரமாக சீரமைக்கப்படாததால், கிராமத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு பெருமாநல்லுார், நெடியம், சாமந்தவாடா வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.

இதில், நெடியம், சாமந்தவாடா பகுதியில் தரைப்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த இரண்டு தரைப்பாலங்களும் பலமுறை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. கடந்தாண்டு பருவமழையின் போதும், சாமந்தவாடா தரைப்பாலம், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால், சாமந்தவாடாவில் இருந்து, ஞானம்மாள்பட்டடை வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதனால், புண்ணியம் வழியாக மாற்றுப்பாதையில், 6 கி.மீ., துாரம் சுற்றிக் கொண்டு, பள்ளிப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த தரைப்பாலம் தற்காலிகமாகமணல் மூட்டைகளால் சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் பருவமழையின் போது, வெள்ள சீற்றத்தை தாக்குப்பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, சாமந்தவாடா தரைப்பாலத்தை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement