மாத கணக்கில் தேங்கி நிற்கும் கழிவுநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்தப்படுமா?

கும்மிடிப்பூண்டி,:தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில்,மழைநீருடன் கழிவுநீர் கலந்து மாத கணக்கில் தேங்கியுள்ளதால், பகுதிவாசிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி அடுத்த சின்னஓபுளாபுரம் கிராம பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியின் கழிவுநீர், தேசிய நெடுஞ்சாலையின் மழைநீர் கால்வாயில் திறந்து விடப்படுகிறது.

இந்த கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேற வழி ஏற்படுத்தவில்லை. இதனால், அந்த இடத்தில் தாழ்வாக உள்ள இணைப்பு சாலையில், பல மாதங்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது.

இதனால், அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றமும் வீசி வருகிறது. மேலும், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

எனவே, தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, இக்கால்வாயில் மழைநீர் வடிந்து செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement