சுமைப்பணி தொழிலாளர்கள் 'திடீர்' ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: காணையில் சி.ஐ.டி.யு., சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் 'திடீர்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகே காணை பி.டி.ஓ., அலுவலக குடோனில், மூட்டைகள் ஏற்றி இறக்கும் பணியில், அப்பகுதி சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டுள்ளனர்.

இதில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர், 50க்கும் மேற்பட்டோர் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் காணையை சேர்ந்த சிலர், புதிய தொழிற்சங்கம் தொடங்கி, அந்த தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என கோரியதால், கடந்த சில மாதங்களாக பிரச்னை நடக்கிறது.

இதை தீர்க்க வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., சுமைப்பணி தொழிற்சங்கத்தினர், காணை பி.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று 'திடீர்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் முருகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் மூர்த்தி, சுமைப்பணி சங்க செயலாளர் குமார், தலைவர் பழனி உள்ளிட்டோர் பேசினர்.

நியாயமான முறையில், நீண்ட காலம் பணி செய்து வரும் சுமை தொழிலாளர்களுக்கு பணிகள் வழங்கி, தொடர்ந்து குடோனில் வேலை நடக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தினர்.

தகவல் அறிந்த பி.டி.ஓ., சிவனேசன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில், பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

Advertisement